தமிழின் ‘அ, இ, உ’ என்னும் மூன்று சுட்டினுள் உகரச் சுட்டு, முன்மைப்பொருள் தருவதாகத் தமிழில் வளர்ந்துள்ளது. இவ் உகரச் சுட்டு வழியாக முன்னோக்கிச் செலுத்துதல் பொருளில் ‘உகைத்தல்’ என்னும் சொல் தோன்றியது. இவ் ‘உகை’ சொல், உகர-அகர மாற்றத்தில் ‘அகை’ எனத் திரிந்து அதே பொருளில் மேலுமொரு சொல்லாகத் தமிழில் வளர்ந்தது. தமிழின் இவ் ‘அகை’ சொல்லே, agent முதலான மேலை இந்தோ-ஐரோப்பியச் சொற்களைத் தோற்றுவித்தது. இச் சொல்லின் வேராக கீற்று அகராதி, பொக்குரோனி அகராதி, வாட்கின்சு அகராதி, இணையவழி வேர்ச்சொல் அகராதி ஆகியவை *ag என்னும் வேரினையும் அதன் வேர்ப்பொருளாக to drive, draw out or forth, urge, move போன்றவற்றையும் குறித்திருக்கின்றன.
‘உகை-அகை’ ஆகிய இத் தமிழ்வேர், பகு – bhaj; புகு – புகா(உணவு) – bhuj போன்று ககர-சகர மாற்றத்தில் சமற்கிருதத்தில் ‘ajati (drives)’ எனத் திரிந்து வழங்குகிறது.
உகரச் சுட்டு
உகரமாகிய சுட்டெழுத்து இதழினைக் குவித்து ஒலிப்பதன்வழிப் பிறப்பதாகும். (‘உ ஊ ஒ ஓ ஓள என இசைக்கும் அப்பால் ஐந்தும் இதழ்குவிந்து இயலும்’, தொல்.எழுத்து.87). இதழினை முன்னோக்கிச் செலுத்துவதன்வழி, ‘உ’ ஆகிய இவ் எழுத்து பிறப்பதன் அடிப்படையில் இவ் எழுத்தின்வழிப் பிறந்த சொற்கள் பலவும் முற்செலவுப் பொருளைத் தமிழில் பெற்றுள்ளன என்பார் பாவாணர். (வேர்ச்சொல் கட்டுரைகள்-1, பாவாணர், ப.31).
உதை, உந்து, உப்பு, உகப்பு, உயர்வு, உம்பர் (உயரத்தில் இருக்கும் மேலுலகம்), உப்பரிகை (மேல் மாடம்), உத்தரியம்(மேலாடை), உத்தரவு (உயர்ந்த மேலிடத்திலிருந்து வருகின்ற ஆணை) , உத்தரம் (வீட்டின் மேலுள்ள உறுப்பு); உவணம் (உயரத்தில் வானத்தில் பறக்கும் பருந்து) போன்ற பல சொற்களைப் பாவாணர் இதற்கு எடுத்துக்காட்டுவார்.
தொல்காப்பியத்தின் ‘உகப்பே உயர்தல்’(தொல்.சொல்.305) என்ற நூற்பாவும் இப் பொருளது.